
போர்டிக்சன், ஜூலை-24-மலேசியா ஒருபோதும் யூத சமூகத்திற்கு எதிரானது அல்ல; மாறாக அது மனித உரிமை மீறல்களுக்கும் அநீதிக்கும் மட்டுமே எதிரானது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
பாலஸ்தீன மக்களை அடக்குமுறையால் கொடுமைப்படுத்தும் இஸ்ரேலின் அட்டகாசத்தை அடிப்படையில் தான் இஸ்ரேலை மலேசியா எதிர்க்கிறது; இந்த உறுதியான நிலைப்பாடு என்பது யூதர்களுக்கு எதிரான உணர்வினால் ஆனது அல்ல; மாறாக நீதியின் பக்கமும், அநீதிக்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையிலும் அமைந்தது என்றார் அவர்.
எனவே, அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆட்சேபத்துக்கும் மிரட்டல்களுக்கும் எல்லாம் பயந்து, இஸ்ரேலிய குடிமக்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் மலேசியா பின்வாங்காது என அன்வார் திட்டவட்டமாகச் சொன்னார்.
மதம் அல்லது இன பாகுபாடின்றி, அடக்கப்படும் மக்களின் உரிமைகளுக்காக மலேசியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
மலேசியாவின் அனைத்துலக நிலைப்பாடு உலகளாவிய நீதியை நிலைநாட்டுவதற்கே தவிர, எந்தவொரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ எதிரான வெறுப்பை பரப்புவதற்காக அல்ல.
எனவே, உலகளாவிய அமைதியை நிலைநாட்டவும், மனிதநேயற்ற தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அனைத்துலகச் சமூகம் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.



