
மலேசியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே எட்டப்பட்ட பல்வேறு முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவாக அமுல்படுத்துவதற்காக சிறப்பு உயர்நிலை வழிமுறை ஒன்றை உருவாக்கப், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்தியத் தலைநகர் புது டெல்லியில் நடைபெறும் 18-ஆவது பிரிக்ஸ் (BRICKS) உச்சி மாநாட்டுக்கு வெளியே நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பில் இந்த முக்கிய முடிவு எட்டப்பட்டது.
இந்தச் சிறப்பு வழிமுறையின் மூலம், மலேசியச் செம்பனை எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்ய சந்தையில் அதிகரிப்பது, இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமானச் சேவைகளைத் தொடங்குவது மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த விசா இல்லாப் பயண ஏற்பாடுகளை விரைவுபடுத்துவது போன்ற முக்கிய திட்டங்கள் துரிதப்படுத்தப்படும்.
தவிர, மலேசியாவின் பெட்ரோனாஸ் மற்றும் ரஷ்யாவின் Rosneft நிறுவனங்களுக்கு இடையிலான எரிசக்தித் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், உயர் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் புதிய கூட்டு முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.
இவ்வேளையில், பிரதமர் அன்வார், இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் மசூத் Masoud Pezeshkian மற்றும் எத்தியோப்பியப் பிரதமர் Abiy Ahmedஆகியோருடன் மேலும் மூன்று இருதரப்புச் சந்திப்புகளை மேற்கொள்கிறார்.
2025-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ‘பிரிக்ஸ்’ அமைப்பின் நட்பு நாடாக மலேசியா இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



