
நெகிரி செம்பிலான், சிரம்பான் – குவாலா பிலா அருகே, சாலையில் கார் மோதியதில் 250 கிலோ எடையுள்ள ஓர் ஆண் தாப்பீர் பரிதாபமாக உயிரிழந்தது.
நேற்றிரவு, பாதுகாக்கப்பட்ட இந்த அரிய வகை விலங்கு, அருகில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறி, இருட்டான வேளையில் திடீரெனச் சாலையைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
காரை ஓட்டி வந்தவர் அதைத் தவிர்க்க முயன்றும் முடியாமல் மோதிய போதிலும், அதிர்ஷ்டவசமாக அவருக்குப் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் இலாகாவான PERHILITAN அதிகாரிகள் அந்த தாப்பீருக்கு முதலுதவி வழங்கினர்; எனினும், அது பலனளிக்கவில்லை.
இதையடுத்து இன்று அதிகாலை உயிரிழந்த விலங்கின் உடலை மீட்டு அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வாகனமோட்டிகள் வேகக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



