கோலாலம்பூர், ஜூலை 16 – பல்வேறு அனைத்துலக போட்டிகளில் சுத்தியல் வீசும் பிரிவில் 20 ஆண்டு காலம் வெற்றிகளை குவித்திருக்கும் மலேசியாவின் முன்னணி சுத்தியல் வீசும் வீரர் M. டாத்தையா ( Dattaya ) இன்று காலையில் தமது 90 ஆவது வயதில் காலமானார். ஆஸ்திரேலியாவில் மெல்பர்னில் உள்ள தனது மகளின் இல்லத்தில் மலேசிய நேரப்படி இன்று காலை 6 மணியளவில் அவர் இறந்தார். தைப்பிங்கை சேர்ந்த டாத்தையா கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி இருந்து வந்தார். 1971, 1973,மற்றும் 1979ஆம் ஆண்டு சீ போட்டியில் சுத்தியல் வீசும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள டாத்தையா அரசாங்க ஊழியர் ஆவார். அவர் அனைத்துலக ரீதியிலும் பல்வேறு திடல் போட்டிகளில் பதக்கங்களை வென்று மலேசியாவிற்கு பெருமையை தேடித்தந்துள்ளார்.
விளையாட்டுத்துறையில் டாத்தையா சகலாகலா வல்லரவாக விளங்கியதாக முன்னாள் ஈடடி எறியும் வீரரும் 1970ஆம் ஆண்டுகளில் தேசிய பயிற்சியாளராகவும் இருந்த நசத்தார் சிங் ( Nashatar Singh) தெரிவித்தார். நாங்கள் இருவரும் 1950 மற்றும் 1960ஆம் ஆண்டுகளில் பேரா ரக்பி குழுவில் விளையாடியிருக்கிறோம். இதுதவிர டாத்தையா பேரா காற்பந்து குழுவிலும் விளையாடியிருக்கிறார் என நசத்தார் சிங் கூறினார். விளையாட்டின் மூலம் நாட்டிற்கு பல வெற்றிகளை தேடித்தந்து மறக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் டாத்தையாவும் ஒருவராகிவிட்டார் என நசத்தார் சிங் தெரிவித்தார்.