
தெமர்லோ, ஆகஸ்ட்-15,பஹாங், தெமர்லோ-திரியாங் சாலையின் 9-ஆவது கிலோ மீட்டரில் 32 ஆயிரம் லிட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கார் மீது மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் காரிலிருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று மாலை மழையின் போது, நெகிரி செம்பிலான், சிரம்பானிலிருந்து தெமர்லோ நோக்கிப் பயணித்த அந்த எரிபொருள் லாரி கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசைப் பாதைக்குள் நுழைந்து எதிரே வந்த கார் மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் கொழுந்துவிட்டு எரிந்ததில், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லாரியில் எரிபொருள் இருந்ததால் தீயை அணைக்கும் பணி சவாலாக இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
விபத்தில் இலேசான காயங்களுடன் தப்பிய 37 வயது லாரி ஓட்டுநர் கைதுச் செய்யப்பட்டு, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.



