Latestமலேசியா

வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு தேவைகளால் இயக்கப்பட வேண்டும்; வணிக நலன்களால் அல்ல – ஸ்டீவன் சிம்

மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கெடுக்கும் நடவடிக்கை, உண்மையான துறைசார் தேவைகள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்;

மாறாக, வணிக நலன்கள் அல்லது இலாபம் ஈட்டும் நோக்கங்களால் அல்ல என மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறியுள்ளார்.

அமைச்சர் முன்னதாக, வங்காளதேசத்தின் – வெளிநாட்டவர் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஆலோசகர் Dr அசிஃப் நஸ்ருல் மற்றும் வங்காளதேசத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான சிறப்புத் தூதர் லுட்ஃபி சித்திக் ஆகியோரைச் சந்தித்து பேசினார்.

நேற்றைய அச்சந்திப்பைத் தொடர்ந்து மனிதவள அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் ஸ்டீவன் அவ்வாறு கூறினார்.

அச்சந்திப்பில் மலேசியாவும் வங்காளதேசமும் JWG எனப்படும் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தின் மூலம் தொழிலாளர் மேலாண்மைக்கான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு முறையை வலுப்படுத்த ஒப்புக்கொண்டன.

வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான மலேசியாவின் நீண்டகால யுக்தியையும் அமைச்சு பகிர்ந்து கொண்டது.

உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை ஊக்குவிக்கும் அதே வேளை, நிலையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த தொழிலாளர் சந்தையை வளர்க்கும் பல அடுக்கு வரிவிதிப்பு முறையை செயல்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இவ்வேளையில், தொழிலாளர் மேலாண்மை செயல்முறைகளில் துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடத்தைகளைக் கையாள்வதில் மலேசியாவின் முயற்சிகளை அங்கீகரித்ததற்காக, வங்காளதேச அரசாங்கத்திற்கு மலேசியா சார்பில் ஸ்டீவன் சிம் பாராட்டும் தெரிவித்தார்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!