கோலாலம்பூர், மே 19 – விபத்தில் சம்பந்தப்பட்ட ஆடவரை கும்பல் ஒன்று துரத்திப் பிடிக்க முயன்றதால் காரை நிறுத்திவிட்டு கால்வாயில் இறங்கி அவர் தப்பியோட முயன்ற காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது. 24 வயதுடைய அந்த ஆடவர் ஷா அலாமிலிருந்து Jalan Kebun வழியாக தமது Proton Satria காரை ஓட்டிச்சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளார். அதன்பிறகு அவருக்கும் அந்த மோட்டார் சைக்கிளோட்டிக்குமிடையே வாய்த் தகராறு ஏற்பட்டதோடு அந்த காரை சேதப்படுத்தப்போவதாக மோட்டார் சைக்கிளோட்டி மிரட்டியுள்ளார். இதனால் அங்கிருந்து வெளியேறியபோது மற்றொரு மோட்டார் சைக்கிள் மற்றும் மேலும் ஒரு காரை மோதிய Proton Satria கார் ஓட்டுனர் Jalan Sungai Jati வழியாக செல்லவே அவரது காரை இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் விரட்டிச் சென்றனர்.
அதன் பிறகு இதர வாகனங்களையும் மோதிய அந்த கார் ஓட்டுனர் பின்னர் லோரியில் மோதியபின் சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி தம்மை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தில் அங்கிருந்து ஓடிச் சென்று ஒரு கால்வாய்க்குள் குதித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சிலர் அந்த ஆடவர் மீது பொருட்களை வீசி தாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த MPV ரோந்துக் காரை சேர்ந்த போலீஸ்காரர்கள் அந்த ஆடவரை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Cha Hoong Fong தெரிவித்தார். அந்த ஆடவருக்கு எதிராக விபத்து தொடர்பான 10 புகார்களை போலீசார் பெற்றதைத் தொடர்ந்து 1987ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 42ஆவது விதி (உட்பிரிவு 1) -ன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.