
ஈப்போ, செப்டம்பர் 15 – தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில், ஹலால் சான்றிதழ் இல்லாத உணவகத்தில் இஸ்லாமிய அடையாளங்களைப் பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட உரிமையாளருக்கு 18,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
தைப்பிங், ஜாலான் கமுந்திங்கிலுள்ள (Jalan Kamunting) அந்த உணவகத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சின் (KPDN) அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது. அப்போது ‘அல்லாஹ்’, ‘முஹமட்’ ஆகிய வார்த்தைகள் பொறிக்கப்பட்ட அலங்காரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பேராக் இஸ்லாமிய சமயத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த உணவகத்திற்கு மலேசிய ஹலால் சான்றிதழ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், கைப்பற்றப்பட்ட இரண்டு சோயா சாஸ் போத்தல்களில் பன்றியின் DNA இருப்பது மலேசிய வேதியியல் துறை ஆய்வில் தெரியவந்தது.
இந்த வழக்கில் 43 வயதான உணவக உரிமையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் 18,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. மலேசிய வர்த்தக விளக்கங்கள் அதாவது ஹலால் வரையறை ஆணையின் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.



