![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/12/MixCollage-28-Dec-2024-09-33-AM-3501.jpg)
ஈப்போ, டிசம்பர்-28,
ஹலால் சான்றிதழைப் பெறுமாறு ஊராட்சி மன்றங்கள் உணவு மற்றும் பான விற்பனையாளர்களைக் கட்டாயப்படுத்தத் கூடாது.
அவ்வாறு செய்வது, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான JAKIM-மின் அதிகாரத்தை மீறும் செயல் என, வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் நினைவுறுத்தியுள்ளார்.
உணவக நடத்துனர்கள் ஹலால் சான்றிதழக்கு விண்ணப்பிப்பதை அரசாங்கம் ஊக்குவிக்கிறதே தவிர ஒருபோதும் கட்டாயப்படுத்தாது என அமைச்சரவை முடிவு செய்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
ஹலால் சான்றிதழைக் கட்டாயப்படுத்தினால் நாசி லெமாக், பீசாங் கோரேங் போன்ற சிறு வியாபாரிகளின் செலவினங்களும் சுமையும் அதிகரிக்குமென்றார் அவர்.
தவிர, இது பல்லின மக்கள் வாழும் நாடு; ஆக, ஹலால் அல்லாத உணவுகளை விற்கும் மலாய்க்காரர் அல்லாத வியாபாரிகளின் தேவைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டுமென ஙா கோர் மிங் சொன்னார்.
கிளந்தான் மாநில அரசாங்கம், அங்குள்ள உணவு மற்றும் பான விற்பனையாளர்கள் தங்களின் வியாபார உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்றால், ஹலால் சான்றிதழை வைத்திருக்க வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போதைக்கு கோத்தா பாரு இஸ்லாமிய மாநகர நகராண்மைக் கழகத்தில் அது அமுலுக்கு வந்துள்ளது; பின்னர் மற்ற ஊராட்சி மன்றங்களுக்கும் அது விரிவுப்படுத்தப்படுமெனக் கூறப்படுகிறது.
அது குறித்து செய்தியாளர்கள் கருத்துரைக்க கேட்ட போது அமைச்சர் அவ்வாறு சொன்னார்.