
ஷா ஆலாம் – ஜூன்-13 – வர்த்தக வாகனங்களுக்கான வேக வரம்புக் கருவியான SLD செயல்பாட்டுச் சான்றிதழ், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி அமுலுக்கு வரும்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அதனைத் தெரிவித்தார். இக்கருவியானது வேகத்தைத் தடுப்பதில், குறிப்பாக அதிக சுமைகள் அல்லது பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் வேகத்தைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் சொன்னார்.
ஷா ஆலாம், புக்கிட் ஜெலுத்தோங் தொழில்துறை பூங்காவில் உள்ள Scania Malaysia தொழிற்சாலையில் SLD-கள் குறித்த விளக்கமளிப்புக் கூட்டத்திற்குப் பிறகு அவர் பேசினார். SLD என்பது ஒரு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி அல்லது வாகனத்தின் அதிகபட்ச வேகத்தைக் கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும்.
புதிதாகப் பதிவுச் செய்யப்பட்ட கனரக வாகனங்களில் அவற்றைப் பொருத்துவதற்கான விதிமுறை 2015 ஜனவரி 1 முதல் நடைமுறையில் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 2015 முதல் பதிவுச் செய்யப்பட்ட 3,500 கிலோ கிராமுக்கு மேல் எடையுள்ள விரைவுப் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள் மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் SLD செயல்பாட்டுச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த ஆவணம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு, எல்லா நேரங்களிலும் உடன் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
இந்நிலையில், 2015-க்கு முன் பதிவுச் செய்யப்பட்ட மற்றும் மின்னணு கட்டுப்பாட்டு யூனிட்டுகளில் SLD அம்சங்களைக் கொண்ட வாகனங்கள், அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் அவற்றைச் செயல்படுத்த வேண்டும்.
அதுவே SLD அமைப்புகள் இல்லாத வாகனங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட சாதனங்களை மறுசீரமைப்பு செய்வது கட்டாயமாகும். அது 2026 ஜூலை 1-ஆம் தேதி அமுலுக்கு வருமென அந்தோணி லோக் கூறினார்.