
கோலாலம்பூர், பிப்ரவரி-23-அமெரிக்கா விதித்துள்ள புதிய இறக்குமதி வரிகள் தொடர்பாக, வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் விளக்கமளிக்கப்படும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இப்புதிய வரி விதிப்பு நாட்டின் ஏற்றுமதி மற்றும் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அரசாங்கம் நிலைமையை கவனமாக கண்காணித்து வருவதாக அவர் சொன்னார்.
அதிபர் டோனல்ட் ட்ரம்ப், அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு புதிய உலகளாவிய வரிகளை அறிவித்துள்ளார்.
முதலில் 10 விழுக்காடாக அறிவித்தவர் பின்னர் 15 விழுக்காடாக அதனை மாற்றினார்.
கடந்தாண்டு அவர் தடாலடியாக விதித்த பரஸ்பர வரி செல்லாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து ட்ரம்ப் இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மலேசியா, குறிப்பாக மின்னியல் உள்ளிட்ட பல பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதால், இப்புதிய வரி அமெரிக்க இறக்குமதியாளர்களுக்கு கூடுதல் செலவாகி, மலேசிய நிறுவனங்களுக்கு சவாலாக மாறக்கூடும்.
இந்நிலையில், முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சான MITI, தற்போது இந்த வரியின் தாக்கத்தை ஆய்வு செய்து வருகிறது.
அவ்வகையில் வெள்ளிக்கிழமை அமைச்சரவை விளக்கக் கூட்டம், மலேசியாவின் வணிகங்கள், ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை பாதுகாக்க அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, மலேசியாவின் முக்கிய வாணிப பங்காளிகளில் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



