
கோலாலாம்பூர், மார்ச்-13-அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி தொடர்பான விசாரணைக்காகத் தேடப்படும் முக்கிய சாட்சிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் அதனை அம்பலப்படுத்தியுள்ளார்.
ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் KLIA வழியாக அவர்கள் வெளிநாடுகளுக்குத் ‘தப்பிச்’ சென்றதை குடிநுழைவுப் பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
இந்நிலையில், இதுவரை மலேசியாவில் உள்ள 14 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
நாட்டின் நிலைத்தன்மை மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை சிதைக்க முயன்றதாகக் கூறி இச்சம்பவம் விசாரிக்கப்படுவதாகக் கூறிய குமார், பொது மக்கள் தேவையற்ற யூகங்களைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
விசாரணையின் ஒருபகுதியாக இவ்வாரம் குறைந்தது மூவர் புக்கிட் அமான் வரவழைக்கப்பட்டனர்.
UIA பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த Syaza Shukri, ஊழல் ஒழிப்பை வலியுறுத்தும் C4 மையத்தின் தலைமை செயலதிகாரி Pushpan Murugiah, முன்னாள் நிதியமைச்சர் மறைந்த துன் டாய்ம் சைனுடினின் மனைவியின் வழக்கறிஞர் Nizamuddin Hamid ஆகியோரோ அம்மூவராவர்.
விசாரணையில் சிக்கிய மின்னஞ்சலொன்றில் பெயர் குறிப்பிடப்பட்டதால Pushpan-னும் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.



