
டெங்கில், ஜூன்-27-நாட்டின் பணவீக்கம் மற்றும் வாடகை உயர்வைக் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்காகக் குறைந்த வாடகை வீட்டுத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பினாங்கு, பேராக், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களுக்கு மேற்கொண்ட அலுவல் பயணங்களின்போது, அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் வீட்டு வாடகைச் சுமையை தாம் நேரில் அறிந்ததாக அவர் கூறினார்.
அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 15 முதல் 30 விழுக்காடு வரை சம்பள உயர்வு வழங்கப்பட்ட போதிலும், கோலாலம்பூர், ஜோகூர் பாரு, சிரம்பான் மற்றும் ஈப்போ போன்ற முக்கிய நகரங்களில் நிலவும் கடுமையான வாடகை உயர்வு, அந்தச் சம்பள உயர்வை முழுமையாக ‘விழுங்கி’ விடுவதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இத்திட்டத்தை விரைவாகவும் மலிவான விலையிலும் செயல்படுத்துவதற்காக, அரசுக்குச் சொந்தமான நிலங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர், டெங்கிலில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் பிரதமர் இந்த விவரங்களை வெளியிட்டார்.



