
புத்ராஜெயா, ஜூன்-27-பொதுச் சேவை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அரசு ஊழியர்கள் வாரத்தில் இரு நாட்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்த _hybrid_ கலப்புப் பணித் திட்டத்தின்படி, அரசு ஊழியர்கள் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திலும், 2 நாட்கள் வீட்டில் இருந்தும் பணியாற்றலாம் எனப் பொதுச் சேவைத்துறையான JPA தெரிவித்துள்ளது.
இதன்படி, சிலாங்கூர், கோலாலம்பூர் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் உள்ள ஊழியர்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், மற்றொரு நாளிலும் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும்.
அதே சமயம், வார இறுதி விடுமுறை நாளாக வெள்ளிக்கிழமையைக் கொண்டுள்ள கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களில் ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகள் கட்டாய அலுவலக நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் ஊழியர்களின் செயல்திறனைக் கண்காணிக்க புதிய கண்காணிப்பு முறை அறிமுகப்படுத்தப்படும்;
பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் முகப்பிடச் சேவைகள் போன்ற அத்தியாவசியத் துறைகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் JPA தெரிவித்துள்ளது.



