
அஹமதாபாத் – ஜூன்-13 – இந்தியா, அஹமதாபாத் விமான விபத்தில் ஒருவரைத் தவிர மற்ற அனைத்து 241 பேரும் பலியாகியுள்ள நிலையில், அவர்களின் கதைகள் ஒவ்வொன்றாக வெளியாகி சோகத்தை அதிகரிக்கச் செய்துள்ளன.
அவ்வகையில் குடும்பத்தோடு ஒன்றிணைய விரும்பி, நொடிப்பொழுதில் அவ்வாசை சுக்குநூறாகிப் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் முடிவும் அடங்கும்.
6 வருடங்களாக லண்டனில் வசித்து வந்த Dr பிரதிக் ஜோஷி, இந்தியாவில் தங்கியிருந்த மனைவி Dr கோமி லியாஸ் மற்றும் 3 பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் சிறந்த எதிர்காலத்தை கொடுப்பதை ஆசையாகக் கொண்டிருந்தார். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு அந்த ஆசை கைகூடியது;
இதையடுத்து இந்தியாவில் தனது வேலையை ராஜினாமா செய்த அவரின் மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன், புதிய கனவு நோக்கி பிரதிக் லண்டன் புறப்பட்டார். உற்சாகத்துடன் விமானத்தினுள் ஐவரும் செல்ஃபி எடுத்து உறவினர்களுக்கும் அனுப்பி வைத்தனர்.
ஆனால், அவர்களின் அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. நொடிப்பொழுதில் ஏற்பட்ட விபத்தில் அவர்களில் எவரும் உயிர் பிழைக்கவில்லை.
வாழ்நாள் கனவே சாம்பலானது…
இந்த வாழ்க்கை நிரந்தரமற்றது; எதுவும் நொடிப்பொழுதில் மாறும் என்பதற்கான மற்றொரு உதாரணமே இச்சம்பவம். எனவே, நம்மால் முடிந்த வரை வாழ்க்கையை நேசிப்போம். நாளை தொடங்கும் மகிழ்ச்சிக்காகக் காத்திருக்காமல் இந்த நொடியை அனுபவிப்போம்…