ஆசான், அறிவென்னும் விளக்கை ஏற்றும் உன்னத சக்தி; தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆசிரியர் தின வாழ்த்து

கோலாலம்பூர், மே-16,
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்ற நிதர்சன உண்மைக்கு ஏற்ப, ஒரு குழந்தையை மாபெரும் ஆளுமையாகச் செதுக்கும் உன்னதக் கலைஞர்களே ஆசிரியர்கள் என, ம.இ.கா தேசிய தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இன்றைய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஆசிரியப் பணி என்பது வெறும் தொழில் அல்ல; அது ஒரு மகத்தான அறப்பணி என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்னைத்தானே உருக்கிக் கொண்டு மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒளியூட்டும் மெழுகுவர்த்தியாக ஆசிரியர்கள் திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
உலகை ஆளும் தலைவர்கள் முதல் விண்வெளி விஞ்ஞானிகள் வரை, அனைவரின் வெற்றிக்குப் பின்னாலும் ஓர் ஆசிரியரின் உழைப்பு ஒளிந்திருக்கிறது.
தோல்வியின் போது தோள் கொடுத்து, ஏணியாக இருந்து நம்மை உயரங்களுக்குக் கொண்டு செல்பவர்கள் ஆசிரியர்களே என்றும் அவர் புகழ்ந்தார்.
நமது வாழ்வின் இருளைப் போக்கி, அறிவென்னும் ஒளியேற்றிய அனைத்து ஆசான்களுக்கும் தமது சிரம் தாழ்ந்த வணக்கங்களையும், மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளையும் விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.



