
டுங்குன், ஆகஸ்ட்-14-LPT 2 நெடுஞ்சாலையின் 357-வது கிலோமீட்டர் பகுதியில் கோலா திரங்கானுவில் இருந்து குவாந்தான் செல்லும் பாதையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில், Zontes ரக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் தீயில் உடல் கருகி மாண்டார்.
அம்மோட்டார் சைக்கிளும் Hino லாரியில் சம்பந்தப்பட்ட அவ்விபத்து குறித்து காலை சுமார் 5.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக Dungun மாவட்டக் காவல் துறைத் தலைவர் Superintendent Nik Ab Halim Nik Mat தெரிவித்தார்.
Bukit Besiயில் இருந்து குவாந்தான் நோக்கி ஒரே திசையில் அவ்விரு வாகனங்களும் சென்று கொண்டிருந்த போது அவ்விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
37 வயது உள்ளூர் ஆடவர் ஓட்டிய லாரி, கட்டுப்பாட்டை இழந்து சறுக்கிச் சென்று சாலையின் ஓரத்தில் மோதியது. திடீரென்று பின்னால் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் லாரியை மோதியதாக Nik Ab கூறினார்.
அவ்விபத்தில் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளோட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளும் தீயில் முற்றாக அழிந்தது.
லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததோடு இடது புறப் பின் பகுதியிலும் தீப்பிடித்தது. இருப்பினும் லாரி ஓட்டுநருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை.
அச்சம்பவம் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணமும் கண்டறியப்பட்டு வருகிறது.



