
சாந்தியாகோ, மே-3 – தென்னமரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து வெளியிடப்பட்ட சுனாமி எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை ரிக்டர் அளவைக் கருவியில் 7.4-காக அந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானது.
நில நடுக்கத்தைத் தொடர்ந்து குறைந்தது 12 தடவை தொடர் நில அதிர்வுகளும் பதிவாகின.
இதையடுத்து, தொலைதூர தென்பகுதி மற்றும் அண்டார்டிக்காவில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயரமான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
எனினும், அதிர்ஷ்டவசமாக கட்டமைப்பு வசதிகளுக்கோ மக்களின் உயிர்களுக்கோ சேதாரம் ஏற்படவில்லை.
இதனால் பிற்பகல் வாக்கில் சுனாமி எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டு, வீடுகளிலிருந்து மக்களை வெளியேற்றும் உத்தரவும் இரத்துச் செய்யப்பட்டது.
முன்னதாக வைரலான வீடியோக்களில், சிலி மக்கள் அதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்றி நிதானமாக வெளியேறுவதைக் காண முடிந்தது.
பூங்காங்கள் உள்ளிட்ட மேடான இடங்கள் நெடுகிலும் பள்ளி மாணவர்களும், தொழிலாளர்களும், இதர குடியிருப்பாளர்களும் நிறைந்திருந்தனர்.
சிலி, நில நடுக்கமும் எரிமலை வெடிப்பும் தீவிரமாக உள்ள பசிஃபிக் நெருப்பு வளையத்தில் உள்ள நாடாகும்.