
வாஷிங்டன், மார்ச்-3-“The big one is coming soon” — அதாவது “பெரியத் தாக்குதலே இனிமேல் தான் வரும்” என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல்–ஈரான் போர் சூழலில், அமெரிக்காவும் உள்ளே புகுந்து ஏற்கனவே ஈரானை கடுமையாக தாக்கி வருகிறது; அதன் உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனியையும் கொன்றுவிட்டது.
இதையடுத்தாவது அமெரிக்காவின் ‘சீற்றம்’ தணியும் என எதிர்பார்த்தால், இன்னும் பெரிய தாக்குதல்கள் நெருங்கி வருவதாகக் கூறி ட்ரம்ப் பரபரப்பை அதிகரித்துள்ளார்.
எனவே, பொது மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், இந்த நடவடிக்கை ஈரானின் அணுவாயுத மற்றும் ஏவுகணை திட்டங்களை முறியடிக்கவே எனவும் ட்ரம்ப் கூறிக்கொண்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரானும் அசராமல் தனது வலிமையை வெளிப்படுத்தி வருகிறது.
அதன் புரட்சிகர காவல் படை வெளியிட்ட வீடியோவில், பெரும் நிலத்தடி சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் குவிக்கப்பட்டிருப்பது காட்டப்பட்டது.
அதில் Shahed-136 ‘காமிகாஸி’ ட்ரோன்கள், ஏவுகணை ஏவுதளங்கள் தவிர்த்து ஆயதொலா கமேனியின் படங்களும் இடம்பெற்றிருந்தன.
இது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நேரடியான சவாலாகக் கருதப்படுகிறது.
ஒருபுறம் அமெரிக்கா “பெரிய தாக்குதல்” எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மறுபுறம் ஈரான் தனது ஆயுத களஞ்சியத்தை வெளிப்படுத்தி, தக்க பதிலடிக்குத் தயாராக இருப்பதை காட்டியுள்ளது.
இதனால், மத்திய கிழக்கு வட்டாரம் இன்னும் பெரிய போருக்குத் தள்ளப்படுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது…



