
தெஹ்ரான் – ஜூன்-13 – ஈரானின் அணுவாயுதங்களை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல்களால் மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முதல் தலைநகர் தெஹ்ரான் சுற்றுப்பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டு வருகிறது. வெடிப்புகளைத் தொடர்ந்து வானில் கரும்புகைகள் எழும்பியதைக் காட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
எனினும் அவ்வெடிப்புகளுக்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் ஈரான் சார்பில் வெளியிடப்படவில்லை. என்ற போதிலும் தனது வான் தற்காப்பை ஈரான் 100 விழுக்காட்டு தயார் நிலையில் வைத்துள்ளது; Iman Khomenei விமான நிலையத்தில் அனைத்து விமானச் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தெஹ்ரான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்ற முன்னெச்சரிக்கையில் இஸ்ரேலில் அவசரகால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றோ நாளையோ இஸ்ரேலையும் அதன் மக்களையும் குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படலாம் என அது அஞ்சுவதே அதற்குக் காரணம்.
ஈரானின் அணுவாயுதத் தளங்களை இஸ்ரேல் விரைவில் தாக்கக்கூடுமென நேற்று தான் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருந்தார். எனினும் அரச தந்திர தீர்வுகளுக்கு முன்னுரிமைக் கொடுத்து அத்திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென தனது நெருங்கியப் பங்காளியான இஸ்ரேலை டிரம்ப் கேட்டுக் கொண்டார்.
ஆனால் மறுநாளே டிரம்பின் ஆலோசனை மீறப்பட்டுள்ளது.