
கோலாலாம்பூர், மே-29 – தனது பெயரைப் பயன்படுத்தி ஊடக அறிக்கைகளில் தவறான தகவல்களைப் பரப்பும் பொறுப்பற்ற தரப்பினரை, பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.
எந்தவோர் அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையாக இருந்தாலும், அது தனது அலுவலகம் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்கள் மூலமாகவோ மட்டுமே வெளியிடப்படும் என, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சராகவும் இருக்கும் ரமணன் கூறினார்.
“விரக்தியடைந்த” பொறுப்பற்ற தரப்புகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்;
எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அவதூறு விஷயங்களைப் பரப்பும் செயல் தற்போது பரவலாகி வருகிறது; எனவே கட்சி உறுப்பினர்கள் கடுமையான நடவடிக்கைகளால் அதை எதிர்கொள்ள வேண்டும் என, கடந்த வாரம் பி.கே.ஆர் தேசியப் பொதுப் பேரவையில் தனது நிறைவு உரையின் போது தான் குறிப்பிட்டதையும் ரமணன் சுட்டிக் காட்டினார்.