
பெட்டாலிங் ஜெயா, மே-26-சமுதாயத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உன்னத நோக்கில், ‘டத்தோ யோகேஸ் கிண்ண இரண்டாம் ஆண்டு நல்லெண்ண கோல்ப் போட்டி 2026’ சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் மிக பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.
நாட்டின் புகழ்பெற்ற MySkills அறக்கட்டளைக்கு இவ்வாண்டு 300,000 ரிங்கிட் நிதி திரட்டும் நோக்கில், அதன் நல்ஆதரவாளர் டத்தோ ஏ. யோகேஸ்வரன் ஏற்பாட்டில், Tropicana Golf and Country Resort-டில் இப்போட்டி நடைபெற்றது.
ஆபத்தான சூழலில் உள்ள இளைஞர்களுக்குத் தொழிற்கல்வி மற்றும் முறையான வாழ்வியல் பயிற்சிகளை வழங்கும் MySkills அறக்கட்டளை நிதிக்காக வர்த்தக நிறுவனங்களின் ஆதரவோடு இம்மாபெரும் நிதி திரட்டப்பட்டது.
சுமார் 95 பேர் கலந்துகொண்ட இப்போட்டியின் விறுவிறுப்பான இறுதிச் சுற்றைத் தொடர்ந்து நடைபெற்ற இரவு விருந்தில் வெற்றியாளர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் Medal A பிரிவில் லோகேஷ் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
Medal B பிரிவில் டத்தோ இளையப்பன் முதலிடத்தைப் பெற, Medal C பிரிவில் பால கிருஷ்ணன் சிறந்த சாதனையாளராக மகுடம் சூடினார்.
நலிவடைந்த இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு ஒளியூட்டும் இந்த உன்னத நோக்கிலான போட்டியானது, விளையாட்டையும் தாண்டி சமூக மாற்றத்திற்கான ஒரு மாபெரும் உந்துசக்தியாகத் திகழ்வதாக MySkills நிர்வாகத்தினர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
விளையாட்டுத் திறனோடு மனிதநேயமும் இணையும் போது, அது அடுத்த தலைமுறையினரின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த சான்றாகும்.



