
கோலாலம்பூர், மார்ச்-29-கட்டுமானச் செலவுகள் 40 விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளதால், நாட்டில் வீட்டு விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கில் நீடிக்கும் மோதல்கள் காரணமாக எரிபொருள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.
சிமெண்டு, எஃகு மற்றும் மணல் போன்ற கட்டுமானப் பொருட்களின் செலவே, ஒரு வீடமைப்புத் திட்டத்தின் மொத்த செலவில் பெரும்பகுதியை உள்ளடக்கியுள்ளது.
இதனால் மேம்பாட்டாளர்களுக்கு இருப்பது 2 தேர்வுகளே… ஒன்று செலவின அதிகரிப்பை தாங்கிக் கொண்டு இலாப சரிவை சந்திப்பது…..
அல்லது, அந்தச் செலவை வீடு வாங்குபவர்களிடமே திணிக்கும் வகையில் விலைகளை உயர்த்துவது.
நிச்சயமாக மேம்பாட்டாளர்கள் இரண்டாவது தேர்வைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் என கட்டுமானத் தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
என்றாலும், மக்கள் வாங்கும் சக்திக்குட்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் அரசாங்கத்தின் கடுமையான விதிமுறைகளின் கீழ் வருவதால், அவற்றை வாங்குவோருக்கு பாதிப்பு அதிகமிருக்காது.
மாறாக, வணிக ரீதியிலான மற்றும் ஆடம்பர வீடமைப்புத் திட்டங்களில் உள்ள வீடுகளின் விலைகள் கணிசமாக உயரலாம் எனக் கூறப்படுகிறது.
எனவே, வீட்டு விலைகளை கட்டுப்படுத்த, அரசாங்கமும் கட்டுமானத் துறையும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
கட்டுமானப் பொருட்களின் விலை குறைந்தபட்சம் 5 முதல் 15 விழுக்காடு வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மத்தியக் கிழக்கில் மோதல்கள் தொடர்ந்தால், இந்த எண்ணிக்கை 30 அல்லது 40 விழுக்காடு வரை அதிகரிக்கக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.



