
ஷா ஆலாம், ஏப்ரல்-2-வேலை செய்யும் பெண்களுக்கு ஆதரவாக, மகப்பேறு விடுப்பு உதவித்தொகை திட்டத்தை அரசாங்கம் மேம்படுத்தி வருகிறது.
அது நிறைவடைந்ததும், நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் இறுதிச் செய்யப்படுமென, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று தெரிவித்தார்.
சமூக பாதுகாப்பு நிறுவனமான PERKESO மூலம் இந்த உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இந்த உத்தேசத் திட்டம் அமுல்படுத்தப்பட்டால், வேலை செய்யும் தாய்மார்கள் மகப்பேறு விடுப்பின் போது வருமான இழப்பைச் சமாளிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நாடாளாவிய நிலையில் 100,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயன் தரும் என்றார் அவர்.
தவிர, பெண்களின் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும், குடும்ப நலன்களை பாதுகாக்கவும் இம்முயற்சி பெரிதும் உதவும்.
பெண்களின் பொருளாதார பாதுகாப்பை உறுதிச் செய்யும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக இது அமைவதாக ரமணன் கூறினார்.



