
தெலுக் இந்தான், மே 17 – தெலுக் இந்தான் Jalan Chikus -Sungai Lampam மில் கடந்த செவ்வாய்க்கிழமை கலகத் தடுப்பு போலீஸ் பிரிவைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்களின் உயிரைப் பறித்த கோர விபத்து தொடர்பில் கற்களை ஏற்றிச் சென்ற லோரி ஓட்டுநருக்கு எதிராக இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் 9 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
1987ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்து சட்டத்தின் 41ஆவது பிரிவு (1)ன் கீழ் கொண்டுவரப்பட்ட அந்த ஒன்பது குற்றச்சாட்டுக்களையும்
45 வயதுடைய ரூடி சுல்கர்னைன் ( Rudi Zulkarnain Mat Radi ) என்பவர் மறுத்தார்.
ஹிலிர் பேராக் மாவட்டத்தில், ஜாலான் சுங்கை மாணிக்கின் 15ஆவது கிலோமீட்டரில் மே 13 ஆம் தேதி, காலை மணி 9.05 அளவில் ஒன்பது பேர் உயிரிழந்ததற்கு காரணமாக , பொதுமக்களுக்கு ஆபத்தான முறையில் ஹினோ லோரியை ஓட்டியதாக ரூடி சுல்கர்னைன்
மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஒவ்வொரு குற்றத்திற்கும் அந்த நபருக்கு 6000 ரிங்கிட் ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதித்ததோடு இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஜூன் 17 ஆம் தேதியன்று நிர்ணயித்தது.