
கோலாலாம்பூர், மே-29-ஹஜ் பெருநாளின் போது குர்பான் சடங்கிற்கு பலி கொடுக்கும் மாட்டைப் பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்சா துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில், புகார் எதுவும் வரவில்லை எனக் கூறி போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது வேடிக்கையானது என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கடுமையாகச் சாடியுள்ளார்.
பொது மக்களின் பாதுகாப்புக்காகவே, ஆக்ரோஷமாக மாறிய அந்த மாட்டைத் தான் சுட்டதாக மந்திரி பெசார் விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால், வைரலான வீடியோவில் அந்த மாடு அமைதியாக நிற்பதும், மந்திரி பெசார் சுட்டவுடன் அது சரிந்து விழுந்து இறப்பதும் தெளிவாகத் தெரிவதாக ராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு சமய நிகழ்வுக்கு அபு பாக்கார் ஏன் துப்பாக்கியைக் கொண்டு வந்தார் எனக் கேள்வி எழுப்பியுள்ள ராயர், பொது இடத்தில் துப்பாக்கியைக் காட்டுவதும், சுடுவதும் 1960-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனைக்குரிய கடுமையான குற்றமாகும் என்றார்.
“மந்திரி பெசார் என்பதற்காக அவர் தொட முடியாதவர் அல்ல; யாராக இருந்தாலும் சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை.”
எனவே, சம்பந்தப்பட்ட துப்பாக்கியைப் பறிமுதல் செய்து அபு பாக்கார் மீது போலீஸார் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இன்று வெளியிட்ட அறிக்கையில் ராயர் வலியுறுத்தியுள்ளார்.



