
குவாந்தான் – ஜூன்-15 -பஹாங், குவாந்தானில் 6 கேளிக்கை விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் 85 வெளிநாட்டு GRO பெண்கள் கைதாகினர்.
இன்று அதிகாலை 1 மணிக்கு ஏக காலத்தில் அச்சோதனைகள் நடத்தப்பட்டதாக பஹாங் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் நுர்சாஃபாரிசா இஹ்சான் தெரிவித்தார்.
கைதானவர்களில் 81 பேர் தாய்லாந்து பெண்கள், நால்வர் லாவோஸ் நாட்டவர்கள் ஆவர். இது தவிர, வேலை பெர்மிட்டை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக, 14 வெளிநாட்டு ஆடவர்களும் கைதாகினர்.
அவர்களில் 12 பேர் வங்காளதேசிகள், தலா ஒருவர் ஏமன் நாட்டவர், சீனப் பிரஜை என நுர்சாஃபாரிசா சொன்னார்.
கைதானவர்கள் பெரும்பாலும் கட்டுமானம் மற்றும் துப்புரவுத் துறைகளில் வேலை பெர்மிட் வைத்துள்ளனர்; ஆனால் கேளிக்கை மையங்களில் சட்ட விரோதமாக GRO-வாக அவர்கள் வேலை பார்ப்பது கண்டறியப்பட்டது.
அவர்கள் அனைவரும் Bera-வில் உள்ள கெமாயான் குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர். அந்த 6 கேளிக்கை மையங்களும் ஏற்கனவே சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டவையாகும்.
ஆனால் மீண்டும் மீண்டும் அதே தவற்றை செய்வதால், அவற்றின் உரிமையாளர்கள் மேல் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.