
நியூ யோர்க், ஜூன்-11 – கடந்தாண்டு 1.44 பில்லியனாக இருந்த இந்தியாவின் மக்கள் தொகை இவ்வாண்டு 1.46 பில்லியன் அல்லது 146 கோடியைத் தொடக்கூடும்.
ஐநாவின் புதியப் புள்ளி விவர அறிக்கை அதனைக் கணித்துள்ளது.
இதன் வழி உலகிலேயே மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக தனது நிலையை அது தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இன்னும் 40 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 170 கோடியாக உயர்ந்து, பின்னர் குறையத் தொடங்கும் என்றும் அவ்வறிக்கைக் கூறுகின்றது.
என்ற போதிலும், இந்தியாவில் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.9 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுவே 1960-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 43.6 கோடியாக இருந்த போது, 1 பெண் சராசரியாக 6 குழந்தைகளைப் பெற்றுள்ளார்.
ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு மக்கள் தொகை மாறாமலிருக்க, ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் தேவையாகும்.
இந்திய ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 71 வயது என்றும், பெண்களின் ஆயுட்காலம் 74 வயது என்றும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.