
கூலாய், ஜூலை-22-ஜோகூர், கூலாயில் அமைந்துள்ள “தக்ஷிண பூர்வ மந்திராலயம்” என அழைக்கப்படும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடாலயத்தில், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 355-ஆவது ஆராதனை மகோற்சவத்தை முன்னிட்டு 72 நாட்கள் நீடிக்கும் பிரம்மாண்டப் பூஜைகள் மற்றும் கலை விழாக்கள் வெகு விமரிசையாகத் தொடங்கவுள்ளன.
மடாலயத்தின் நிறுவனர் சத்குருநாதர் தலைமையில் கடந்த 40 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், உலகிலேயே முதன்முறையாக 72 நாட்கள் தொடர்ந்து ஆராதனை உற்சவம் கொண்டாடப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்.
வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி பூர்வ ஆராதனை, ஆகஸ்ட் 30-ஆம் தேதி மத்திய ஆராதனை மற்றும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உத்தர ஆராதனை என முக்கிய 3 நாள் நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளன.
இவ்விழாவில் மலேசியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்தும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
72 நாட்கள் நடைபெறும் இந்த மண்டலப் பூஜையின் போது இரத உற்சவம், பாகவதர் நடனம், பஞ்சமுக ஆஞ்சநேயர் பூஜை, வரலக்ஷ்மி விரதம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளதோடு, வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் தினமும் அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.



