
கெரிக் – ஜூன்-13 – பேராக், கெரிக்கில் UPSI பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் பலியாகக் காரணமான பேருந்து விபத்து தொடர்பில், அதன் ஓட்டுநர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டி மரண விபத்தை விளைவித்ததாக, 39 வயது Mohd Amirul Fadhil Zulkifle கெரிக் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். எனினும், தம் மீதான அனைத்து 15 குற்றச்சாட்டுகளையும் மறுத்து அவர் விசாரணைக் கோரினார்.
ஜூன் 9-ஆம் தேதி அதிகாலை 1.15 மணியளவில் கிழக்கு மேற்கு சாலையின் 53-ஆவது கிலோ மீட்டரில் அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. அக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் 50,000 ரிங்கிட் வரையில் அபராதமும் விதிக்கப்படலாம்.
இவ்வேளையில், கண்மூடித்தனமாகவும் அபாயகரமாகவும் வாகனமோட்டியதாக, மற்றொரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது. அக்குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்; அக்குற்றத்திற்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறையும், 5,000 முதல் 15,000 ரிங்கிட் வரையில் அபராதமும் விதிக்கப்படலாம்.
ஜூன் 9 சம்பவத்தில் 42 UPSI மாணவர்களை ஏற்றிச் சென்ற அப்பேருந்து, திரங்கானு, ஜெர்த்தேவிலிருந்து திரும்பும் வழியில் ஒரு Perodua Alza காரை மோதி தடம்புரண்டது. அதில் 13 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியான வேளை, மேலுமிருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் போது மரணமடைந்தனர்.