
கோலாலம்பூர், பிப் 13- பொழுதுபோக்கு விடுதியில் வாடிக்கை உபசரிப்பாளரான வியட்னாமிய பெண்ணுக்கு பணத்தை செலவழிக்கும் கணவரின் நடவடிக்கையில் ஏமாற்றம் அடைந்த மனைவி இது குறித்து மலேசிய குடிநுழைவுத்துறையிடம் புகார் செய்துள்ளார்.
கடந்த ஒரு ஆண்டு காலமாக ஸ்ரீ பெட்டாலிங்கில் (Sri Petaling) உள்ள பொழுது போக்கு மையத்திற்கு செல்லும் தனது கணவரின் பழக்கத்தினால் 30 வயதுடைய அவரது மனைவி குடிநுழைவு துறையிடம் புகார் செய்ததை கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் இயக்குநர் Wan Mohammed Saupee Wan Yusoff உறுதிப்படுத்தினார்.
தனது சம்பளத்தை அந்த பொழுதுபோக்கு விடுதியில் செலவழித்து முடித்துவிட்ட பின்னர் வீட்டு செலவுக்கு பணம் கொடுத்தாலும் அதனையும் செலவு செய்துவிடுவதாக அப்பெண் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பின்னிரவு மணி 12 .40 அளவில் கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை அந்த பொழுதுபோக்கு விடுதியில் சோதனை நடத்தியது.
அந்த நடவடிக்கையில் 20 முதல் 30 வயதுடைய 27 வெளிநாட்டு பெண்கள் மற்றும் உள்நாட்டு பெண்கள் உட்பட 34 தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்கள் விசாரணைக்காக புக்கிட் ஜாலில் (Bukit Jalil) குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.