சட்டமன்றத்தில் ‘தாடை’ சைகையால் சர்ச்சை; “யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை” – விஜய் விளக்கம்

சென்னை, செப்டம்பர் 9 — தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனது தாடையை கையால் தொட்டு சைகை செய்தது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.
செப்டம்பர் 8ஆம் தேதி X தளத்தில் பதிவிட்ட விஜய், தனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதாகவும், தனிப்பட்ட முறையில் யாரையும் கேலி செய்யவோ அல்லது மனதைப் புண்படுத்தவோ தாம் எண்ணவில்லை என்றும் கூறியுள்ளார்.
அந்தச் சைகையை தவறாகப் பொருள் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்தபோது விஜய் இந்தச் சைகையை செய்தார். அப்போது திமுகவை விமர்சித்த அவர், மிசா சட்டம் மற்றும் சர்க்காரியா ஆணையம் தொடர்பான விவகாரங்களையும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
நெருக்கடி நிலை காலத்தில் சிறையில் இருந்தபோது முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாடையில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் குறிக்கும் வகையிலேயே விஜய் இந்தச் சைகையை செய்ததாக சில தரப்புகள் குற்றஞ்சாட்டின.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில அரசியல் தரப்புகளும் விஜய்யின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.



