
கோலாலம்பூர், மார்ச்-28-சபா மீதான உரிமைக் கோரலுக்கு பிலிப்பின்ஸ் செனட்டர் ஒருவர் மீண்டும் புத்துயிர் கொடுக்க மேற்கொண்டுள்ள முயற்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மலேசியாவுக்கான பிலிப்பின்ஸ் தூதரை உடனடியாக அழைத்து புத்ராஜெயா ஆட்சேபம் தெரிவிக்க வேண்டுமென, பி.கே.ஆர் இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
சபாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் மலேசியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என, அப்பிரிவின் தொடர்பு விவகாரங்களுக்கான இயக்குநர் Nurhanani Dhamirah தெரிவித்தார்.
இதே விவகாரத்தை மையப்படுத்தி ஆகக் கடைசியாக 2020-ல் ஏற்பட்ட தூதரக மோதலை நினைவூட்டிய Nurhanani , இப்புதிய சர்ச்சைக்கு மலேசியா உறுதியான பதிலைத் தர வேண்டும் வலியுறுத்தினார்.
செனட்டர் Robin Padilla, சபாவின் எண்ணெய் வளங்களை சுட்டிக் காட்டி “சபா பிலிப்பின்ஸின் உரிமை” என முன்னதாகக் கூறியிருந்தார்.
அதோடு, சபாவை ‘திரும்பப் பெறுவதற்கு’ மலேசியாவுக்கு அதிகாரிகளை அனுப்பி பேச்சு நடத்த இதுவே சரியான தருணம் என்றும் அந்நாட்டு அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார்.
இதற்கு சபா பி.கே.ஆரும் கடுமையான எதிர்ப்பைப் பதிவுச் செய்துள்ளது.
“இதுவோர் ஆழமற்ற, யதார்த்தமற்ற கூற்று” என அது கண்டித்தது.
ABIM இளைஞர் இயக்கமும், “பொறுப்பற்ற அரசியல் அறிவுரை” என Padilla-வின் பேச்சை சாடியது.
காலனித்துவ ஆட்சியின் போது, பிரிட்டிஷ் வட போர்னியோ கம்பெனிக்கு, சபா மீது இறையாண்மை உரிமை இல்லை; தவிர, ஸ்பெயினிலிருந்து பிரிட்டிஷ் அரசாங்கமும் இறையாண்மை பெறவில்லை; எனவே, சபா பிலிப்பின்ஸ் நாட்டுக்கே சொந்தம் என அவர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால், மலேசியாவோ, சபா மீதான உரிமைக் கோரிக்கை பொருத்தமற்றது என்பதுடன் பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது என்றும் கூறி வருகிறது.
சபாவின் இறையாண்மை முழுக்க முழுக்க மலேசியாவுக்குக் கீழ் வருகிறது; இது முடிந்தபோன விஷயம் என்பதால் மீண்டும் கிளறக் கூடாது என புத்ராஜெயா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.



