
கோலாலம்பூர், ஜூன்-1 – பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் இந்தியப் பிரஜை கோலாலம்பூரில் கைதுச் செய்யப்பட்டதை, தேசியப் போலீஸ் படைத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவும் வகையில், 30 வயது அவ்வாடவர் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்குள் நுழைந்ததாக, தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் கூறினார்.
தலைநகரில் ஹோட்டல் ஒன்றில் ‘மறைந்திருந்த’ அந்நபரை மே 13-ஆம் தேதி அதிகாலை 1.35 மணியளவில் புக்கிட் அமான் அதிகாரிகள் கைதுச் செய்தனர்.
தொடக்கக் கட்ட விசாரணையில், இங்கு போதைப்பொருள் விநியோகம் எதிலும் அந்நபர் ஈடுபட்டது கண்டறியப்படவில்லை.
என்றாலும், உள்ளூரில் தனிக் கட்டமைப்புக் கொண்டுள்ளாரா அல்லது இங்குள்ள போதைப்பொருள் கும்பல்களுடன் தொடர்பு வைத்துள்ளாரா என்பது குறித்து மேற்கொண்டு விசாரிக்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணிக்கு அந்நபர் நாடு கடத்தப்பட்டார் என்றும் IGP சொன்னார்.
நவின் சிச்கர் (Navin Chichkar) எனும் அவ்வாடவர் மலேசியாவில் கைதாகி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக Hindustan Times முன்னதாக செய்தி வெளியிட்டது.
மும்பையில் உள்ள NCB எனப்படும் இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அவர் காவலில் இருப்பதாகவும் அது கூறியது.
இங்கிருந்துகொண்டே,
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கோகோயின் மற்றும் கஞ்சாவை அனுப்பும் கும்பலை நவின் வழிநடத்தி வந்துள்ளார்
அனைத்துலக போலீஸான Interpol அவரைக் கைதுச் செய்யும் நோக்கில் சிவப்பு நோட்டீஸ் வெளியிட்ட நிலையில், தாய்லாந்துக்கு தப்பியோடி பின்னர் அங்கிருந்து மலேசியாவுக்குள் அவர் ஊடுருவியதாக நம்பப்படுகிறது.