
கோலாலம்பூர், பிப் 20 – தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், நேற்று கல்வி அமைச்சர் பட்லினா சிடிக்கைச் சந்தித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது கெடாவிலுள்ள கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி, பஹாங் ஜெராம் தோட்டத் தமிழ்பள்ளி, பினாங்கு சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த மூன்று தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கல்வியமைச்சின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை அவ்விரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
கல்வியமைச்சோடு இணைந்து இப்பள்ளிகளின் பிரச்சனைகளுக்கு தமது தரப்பு நல்லதொரு தீர்வை எட்ட முடியும் என்பதோடு விரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு சந்திப்பு நடத்தப்படும் என கோபிந் சிங் தெரிவித்தார்.
மேலும் சவால்களை எதிர்நோக்கியுள்ள
தமிழ்ப்பள்ளிகள் சுமூகமான தீர்வை எட்டவும், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி விரைவில் சென்றடையவும், தாம் தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கோபிந்த் சிங் வெளியிட்ட அறிக்கையில் உறுதியளித்தார்.