
காஜாங், ஏப்ரல்-15-சிலாங்கூர், காஜாங்கில் சாலையை மறித்து நிறுத்தப்பட்ட காருக்கு அங்குள்ள பொது மக்கள் குப்பைகளைக் கொட்டி பாடம் புகட்டிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Sepakat Indah 2 கடைத்தெருவுக்கு முன் ஒரு குறுகிய சாலையில், பழுப்பு நிற Proton Saga கார் ஒன்று சாலையை மறித்தபடி நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அருகிலுள்ள உணவகத்திற்குச் சென்ற கார் உரிமையாளர், அலட்சியமாகச் சாலையின் நடுவே காரை நிறுத்திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த யாரோ ஒருவர், அந்த காரின் கூரை மற்றும் டயர்களுக்கு அருகில் குப்பை மூட்டைகளை அடுக்கி வைத்து விட்டார்.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ‘சுயநலவாதிகளுக்கு இது சரியான பாடம்’ எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், இதுபோன்ற பிரச்சனைகளில் பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்காமல் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும் சிலர் கருத்தை வெளியிட்டனர்.
என்றாலும், ‘பட்டால் தான் புரியும்’ என்ற கருத்தை ஆமோதிப்பவர்களே அதிகமுள்ளது கருத்துகளைப் படிக்கையில் தெரிகிறது.



