
சிலாங்கூரில் பன்றி பன்னைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – சிலாங்கூர் சுல்தான் விருப்பம்
ஷா அலாம், பிப்ரவரி-10,
சிலாங்கூரில் பன்றி வளர்ப்பை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா விருப்பம் தெரிவித்துள்ளார். பன்றிப் பண்ணைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிலாங்கூரில் உள்ள மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பன்றி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கு கூடுதல் உரிமங்களை வழங்குமாறு சுல்தான் ஷராபுதீன் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
சிலாங்கூரில் உள்ள எந்த மாவட்டத்திலும் பன்றி வளர்ப்பு பன்னைகள் நடத்தப்படுவதை மேன்மை தங்கிய சுல்தான் அனுமதிக்கவில்லை . பன்றிப் பண்ணைகள் தொடர்பான இந்தப் பிரச்சினை அனைத்து தரப்பினரிடையேயும் அமைதியின்மையை ஏற்படுத்தி, அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதித்துள்ளதால், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் சுல்தான் அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் சுல்தானின் அழைப்பை மதித்து, மாநிலத்தின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஒன்றாகப் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சிலாங்கூர் அரச அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பன்றி வளர்ப்பு நன்றாகவே இருந்தாலும், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் எங்கும் நடத்தப்படக்கூடாது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியிருந்ததை சுல்தான் ஷராபுதீன் வரவேற்றார். சிலாங்கூரில் நிலம் குறைவாக இருப்பதால், பெரிய அளவிலான அல்லது சிறிய அளவிலான பன்றி வளர்ப்பு இரண்டும் சிலாங்கூருக்கு ஏற்றதல்ல என்றும் சுல்தான் கூறியுள்ளார்.



