
சென்னை – ஜூன்-8 – சென்னை அருள்மிகு காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா எட்டாவது ஆண்டாக மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நேற்று சிறப்பம்சமாக சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெற்றது.
இதையொட்டி நேற்றிரவு திரைப்படப் பாடகரும், பக்திப் பாடகருமான கலைமாமணி டி.எல். மகராஜன் மற்றும் குழுவினரின் பக்திபாடல் இசைநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.
இசை நிகழ்ச்சியை பக்தர்கள் மெம்மறந்து இரசித்தனர். அதிலும் குறிப்பாக வைகாசி பெருவிழா என்ற ஒரு பாடலை மேடையிலேயே எழுதி இசையமைத்து பாடி, மகராஜன் வந்திருந்தோரின் பாராட்டைப் பெற்றார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த வைகாசி திருவிழா, அறுபடைவீடு போன்ற பெரியக் கோயில்களில் தான் நடைபெறும்; ஆனால் இந்த காளிகாம்பாள் கமடேஸ்வரர் ஆலயத்திலும் அவ்விழா விமரிசையாக நடைபெற்றது குறித்து மகராஜன் பாராட்டினார்.
மலேசியாவிலும் பல ஆலயங்களில் இந்த வைகாசி திருவிழா நடைபெறுமென எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார். பக்திபாடல் இசைநிகழ்ச்சியின் மூலம் இவ்வாண்டு வைகாசி திருவிழா மேலும் களைக் கட்டியதாக ஆலயத் தலைமை குருக்கள் ஏ.பி. தனபாலன் கூறினார்.