
சீனா, ஜூன் 30 – கடந்த ஜூன் 16 ஆம் தேதி, சீனாவில் ஹைனான் நகரில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சகக்கர வண்டியிலுள்ள இரும்பு கூண்டில் ஆடைகளில்லாமல் இருந்த குழந்தையைப் பூட்டி வைத்த தந்தையின் வைரல் காணொளிக்கு, நெட்டிசன்கள் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
அக்கூண்டிற்கு வெளியேயும் அந்த ஆடவனின் மற்ற குழந்தைகள் நிர்வாணமாக நின்று கொண்டிருந்ததை காணொளியில் காணமுடிந்தது.
ஏழ்மையான குடும்ப பின்னணியைக் கொண்ட அந்நபரின் மனைவி மனநலம் குன்றியவர் என்றும், அவர்களுக்கு 6 குழந்தைகள் இருப்பதும், தங்குவதற்கு இடமில்லாமல் அந்நகரைச் சுற்றி திரிந்து வருகின்றனர் என்றும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது தான் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும், அச்சமயத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை நிர்வகிக்க முடியாததால் முச்சக்கர வண்டியில் ஓய்வெடுக்க விட்டுவிட்டதாகவும் வெயிலின் காரணமாக குழந்தைகள் ஆடைகளின்றி இருந்ததாகவும் அந்த குழந்தைகளின் தந்தை கூறியுள்ளார்.
இந்நிலையில் 60 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள அந்த காணொளியின் கீழ், பல எதிர்மறை கருத்துக்கள் வந்தபோதும் உள்ளூர் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் ஊழியர்கள் குழந்தைகளுக்கு உடைகள், காலணிகள் மற்றும் பொம்மைகளையும் வழங்கி வருகின்றனர்.