![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-21-Jun-2024-05-29-PM-6255.jpg)
கோலாலம்பூர், ஜூன் 21 – தனது பிள்ளைகளுக்காக எதையும் செய்யும் தாய், பிரேதங்களுடன் வேலை செய்ய மாட்டாளா என்ன?
ஆம், தனது கணவரின் மறைவுக்குப் பிறகு குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்ற கடப்பாட்டில் தற்போது சீன மயானத்தில் பிரேதங்களைச் சுத்தம் செய்யும் தாய் தேவியின் மகள்தான் அண்மையில் வெளியான எஸ்.பி.எம் தேர்வில் 9 ஏக்களை பெற்ற துர்கா தேவி சமரசம் .
பல தெய்வங்கள் இருப்பினும் அன்னை போல் நம்மை காக்கும் தெய்வம் பூமியில் ஏதும் இல்லை என்பார்கள்.
அதுபோல, தனது 9வது வயதில் தந்தையின் மறைவுக்குப்பின் குடும்பத்தை காப்பாற்ற, தான் பயின்ற தமிழ்ப்பள்ளியில் தொடக்கக்கட்டத்தில் தன் அம்மா தேவி முனுசாமி துப்புரவு பணியாளராக வேலை செய்ததாக கூறுகிறார் துர்கா தேவி (Durga Devi Samarasam).
தாயின் கடின உழைப்பை பார்த்து வளர்ந்ததால் கல்வி மட்டுமே எனது தலையெழுத்தை மாற்ற முடியும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன்.
அதனால்தான், முழு மூச்சுடன் கல்வி கற்றேன் என்கிறார் செராஸ் Seri Bintang Selatan இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவியான துர்கா தேவி.
எனவே, ஒவ்வொரு மாணவரும் தங்கள் பெற்றோரின் கடினமான வாழ்க்கை பயணத்தைச் சற்று உற்று நோக்கினாலே தங்களது கல்வி பாதையிலிருந்து தவற மாட்டார்கள் என்கிறார் biochemical engineering துறையில் மேற்கல்வி பயில நினைக்கும் துர்கா தேவி.
தாயாக நான் என் கடமைகளைச் செய்தேன். ஆனால் எனக்குப் பக்க பலமாக இருந்தது எனது அண்ணன் Christopher Moorthy மற்றும் அண்ணி Philomina தான் என்கிறார் தேவி.
தனது குழந்தையின் கல்விக்குப் புத்தகம் வாங்கி கொடுப்பது முதல் பிரத்தியோக வகுப்புக்கான கட்டணம் கட்டுவது வரை அவர்கள் செய்த உதவியும்தான், தனது மகள் 9 ஏ-க்கள் பெற வழிவகுத்ததை நன்றியுடன் நினைவுக்கூறுகிறார் இவர். அதே சமயத்தில் பிள்ளைகளின் கல்விக்காக முடிந்த வரை பெற்றோர்கள் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்கிறார் தாய் தேவி.
பெற்றோர் படும் வலியை உணர்ந்த பிள்ளையால் மட்டுமே, தனது வெற்றியின் மூலம் அவர்களை சந்தோஷப்படுத்த முடியும்.
அப்படிபட்ட ஒரு வெற்றியை அடைந்துள்ள துர்காதேவியின் பயணம் இந்த 9Aக்களோடு நின்று விடக்கூடாது. அவர் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வணக்கம் மலேசியாவின் மனமார்ந்த வாழ்த்துகள்.