
கோலாலாம்பூர், மே-26-கெடா, சுங்கை பட்டாணியில் பல ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களுக்குப் பின்னணியாக விளங்கிய ‘Geng Rames’ கும்பலின் தலைவனை, இந்திய மற்றும் தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் புக்கிட் அமான் போலீஸார் அதிரடியாகக் கைதச் செய்துள்ளனர்.
புக்கிட் அமான் CID இயக்குநர் டத்தோ எம். குமார் அதனை அறிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் மலேசிய நீதிமன்றத்தால் கைது ஆணைப் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, இந்தச் சந்தேக நபருக்கு எதிராக ஏப்ரலில் அனைத்துலகப் போலீஸான Interpol-லால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்து பேங்கோக்கிலிருந்து இந்தியாவின் ஹைதராபாத்துக்குப் செல்லும் வழியில் விமானத்தில், அனைத்துலகப் போலீஸாரின் உதவியுடன் அந்நபர் வளைத்துப் பிடிக்கப்பட்டு மலேசியா கொண்டு வரப்பட்டார்.
இந்த சந்தேக நபர் மீது, கொள்ளைச் சம்பவங்கள் மட்டுமின்றி, கடந்த 2024-ஆம் ஆண்டு பாடாங் செராய் மற்றும் பெடோங்கில் (Bedong) நிகழ்ந்த 2 கொலைச் சம்பபவங்கள் தொடர்பாகவும், குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் குமார் குறிப்பிட்டார்.
மே 29 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இவ்வாடவருக்குப் பின்னால் உள்ள எஞ்சிய கும்பலையும் முற்றிலும் வேரறுக்கக் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என குமார் எச்சரித்தார்.



