
சுங்கை பட்டாணியில் விபத்துக்குப் பிறகு இழுவை வண்டி ஓட்டுனருடான தகராறு காணொளி வலைத்தளத்தில் வைரல்
சுங்கை பட்டாணி, பிப்ரவரி 19 –
சுங்கை பட்டாணியில் சாலை விபத்துக்குப் பிறகு டொயோட்டா அல்பார்ட் வாகனத்தை கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் இழுவை வண்டி ஓட்டுநருடன் ஏற்பட்ட தகராறு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த தகவலின்படி, போலீசார் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தபோதும், இழுவை வண்டி ஓட்டுநர் வாகனத்தை உடனே எடுத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
வைரலான காணொளியில், ஓட்டுநர் பாதிக்கப்பட்டவரின் தந்தையை தள்ளியதால் அவர் கீழே விழுந்ததும், இழுவை உபகரணங்களைப் பயன்படுத்தி மிரட்டியதும் காணப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் காப்பீட்டு முகவரை தொடர்புகொண்டதுடன், அதிகாரிகள் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடங்களில் உடனடியாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை பதிவு செய்து வைத்துக் கொள்வது அவசியம் என பொதுமக்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து போலீசாரின் பதிலை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



