கோலாலம்பூர், ஜூலை-7 -மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமக்காக யாரையும் காக்க வைக்க மாட்டார்.
நேரம் தவறாமை அவருக்கு மிகவும் முக்கியம் என்கிறார் மாமன்னரின் நீண்ட கால தனிப்பட்ட உதவியாளரான டத்தோ சுகுமாறன் ராமன்.
இதுவரை ஒரு நிகழ்ச்சிக்குக் கூட சுல்தான் இப்ராஹிம் தாமதமாக வந்ததில்லை.
மாறாக 5 அல்லது 10 நிமிடங்கள் முன்கூட்டியே வந்து தான் அவருக்குப் பழக்கம் என பெர்னாமாவுடனான சிறப்பு நேர்காணலில் டத்தோ சுகுமாறன் சொன்னார்.
பார்ப்பதற்கு கண்டிப்பானவராக இருந்தாலும், அவர் உண்மையில் மற்றவர்களிடம் எளிதில் பச்சாதாபப்படும் ஒரு கனிவான நபர் என சுகுமாரன் சுட்டிக் காட்டினார்.
அவர் எளிதில் கோபப்படவும் மாட்டார்; அப்படியே கோபப்பட்டாலும் உடனே மனதிறங்கி விடுவார்.
சுல்தான் இப்ராஹிமின் மற்றொரு முக்கிய குணநலன், மற்றவர்களுடன் உரையாடுவதும் அவர்களின் கவலைகளைக் கேட்டறிவதாகும்.
அதே சமயம் மக்களிடையே பிரிவினைவாதம் என்றால் அவருக்கு கொஞ்சமும் ஆகாது; அதனைத் தூண்டுவோர் யாராக இருந்தாலும் அரண்மனைக்கு வரவழைத்து கண்டித்து அனுப்புவார்.
அந்த அளவுக்கு மக்களின் ஒற்றுமையை விரும்பும் மாமனிதர் சுல்தான் இப்ராஹிம் என, அவரின் அரியனை அமரும் விழாவை முன்னிட்டு பேசிய போது சுகுமாறன் புகழாரம் சூட்டினார்.
இவ்வாண்டு ஜனவரி 31-ஆம் தேதி நாட்டின் 17-வது மான்னராக பிரகடனப்படுத்தப்பட்ட சுல்தான் இப்ராஹிம், வரும் ஜூலை 20-ஆம் தேதி முறைப்படி அரியணையில் அமருகிறார்.