கோலாலம்பூர், ஜூலை 4 – சாலை சமிக்ஞை விளக்கும் பகுதியில், ஹோண்டா சிட்டி கார் ஒன்று, இதர நான்கு வாகனங்களை பின்னாலிருந்து மோதித் தள்ளும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அந்த ஒன்பது வினாடி காணொளியில், வெள்ளை நிற கார் ஒன்று, சாலை சமிக்ஞை விளக்கில் நிற்கும் இதர வாகனங்களை மோதித் தள்ளி விட்டு, வேகமாக செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த புதன்கிழமை, இரவு மணி 9.40 வாக்கில், செராஸ், சன்வே மெடிக்கல் செண்டருக்கு அருகில், அச்சம்பவம் நிகழ்ந்ததாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா தெரிவித்தார்.
அச்சம்பவத்திற்கு பின்னர், சன்வே மெடிக்கல் செண்டர் நுழைவாயிலுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அக்காரிலிருந்து, பத்தாயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் ருஸ்டி உறுதிப்படுத்தினார்.
அக்காரை ஓட்டிய ஆடவனை போலீசார் தேடி வரும் வேளை ; தகவல் அறிந்த பொதுமக்கள் செராஸ் போலீஸ் நிலையத்தை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.