
ஜோர்ஜ்டவுன், ஜூன் – 2- இந்தோனேசியா, ஜகார்த்தாவில் நடைபெற்ற அனைத்துலக அளவிலான ரோபோடிக் போட்டியில் பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளனர்.
20 நாடுகளிலிருந்து 280 குழுக்கள் பங்கேற்ற Road to Codeavour 7.0 அனைத்துலகப் போட்டியில், பினாங்கு சுங்கை ஆரா மற்றும் பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 6 மாணவர்கள் மலேசியா சார்பில் பங்கேற்றனர்.
இதில், சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்களின் அசாத்திய திறமையால் அனைத்துலக அளவில் நான்காம் இடத்திற்கான ஆறுதல் பரிசை வென்று மாநிலத்திற்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் மற்றும் மின்-கழிவுகளைப் புத்திசாலித்தனமாகப் பிரித்தெடுக்கும் ‘Ecobot Sorter’ என்ற இவர்களின் ரோபோடிக் கண்டுபிடிப்பு உலக அரங்கில் பாராட்டுகளைக் குவித்துள்ளது.
சாதனைப் படைத்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஜோர்ஜ்டவுன் கொம்தாரில் உள்ள தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்துப் பாராட்டிய மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ எஸ். சுந்தராஜூ, மாணவர்களுக்குத் சான்றிதழ்களும், தலா 300 ரிங்கிட் ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவித்தார்.
நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் AI மற்றும் ரோபோடிக்ஸ் போன்ற 21-ஆம் நூற்றாண்டின் கல்வித் துறையில் உலக அளவில் சாதனையாளர்களாக உருவெடுத்து வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.



