
புத்ராஜெயா, செப்டம்பர்-26,
SARA எனப்படும் Sumbangan Asas Rahmah உதவித் திட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்க சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
இப்பரிந்துரை மிக முக்கியமானது என அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் கூறினார்.
காரணம், மக்களின் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்ற அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை இது ஆதரிக்கும் என்றார் அவர்.
ஏராளமான மலேசியர்கள் இன்னமும் பழங்களையும் காய்கறிகளையும் விரும்பிச் சாப்பிடுவதில்லை.
எனவே, சத்தான உணவுகளைச் சிறந்த விலைக்கே வழங்கி, அதை ஊக்குவிக்கும் யுத்தியை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.
இது ஒரு சமூக நல உதவியாக மட்டுமல்லாமல் மக்களின் நீண்டகால சுகாதார விழிப்புணர்வை உயர்த்தும் முயற்சியாகவும் இருக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
தற்போது, SARA உதவியில் 14 அத்தியாவசிய பொருட்கள் அதாவது அரிசி, ரொட்டி, முட்டை, சமையல் எண்ணெய், மாவு, பிஸ்கட், துரித மீ, டின் உணவுகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவை அடங்குகின்றன.