
ஜார்ஜ் டவுன், ஜூலை 31 – சீனா மற்றும் தைவான் நாட்டவர்களைக் குறிவைத்து, ஜப்பானுக்கான சுற்றுலா பயணத் தொகுப்புகளை இணையம் வழியாக வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் அழைப்பு மைய (Call Centre) கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
பினாங்கு தஞ்சோங் பூங்காவில் அமைந்துள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று மாலை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், 25 முதல் 37 வயதுக்குட்பட்ட எட்டு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர், அசிஸ்டென் கமிஷ்னர் அப்துல் ரோசாக் முகமட் கூறுகையில், மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கணினிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இந்தக் கும்பல், ஜப்பான் சுற்றுலா பயணத் திட்டங்களை இணையம் வழியாக விளம்பரப்படுத்தி, சீனா மற்றும் தைவான் நாட்டைச் சேர்ந்தவர்களை ஏமாற்றியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட எட்டு பேரும் மேல் விசாரணைக்காக இன்று முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு, மலேசிய தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



