Latestமலேசியா

டூத்தா டோல் சாவடி வைரல் விபத்து; 4×4 ஓட்டுநரின் சிறை 6 மாதங்களாக நீட்டிப்பு

கோலாலம்பூர், மே-20 – இரு வாரங்களுக்கு முன்னர் உயர் சக்தி கொண்ட மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை இடித்துத் தள்ளிய 4×4 நான்கு சக்கர வாகன ஓட்டுநருக்கு, 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

32 வயது கே. தர்மராஜுவுக்கு மேஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த 30-நாள் சிறையை, கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி 6 மாதமாக உயர்த்தி தீர்ப்பளித்தார்.

எனினும் 12,000 ரிங்கிட் அபராதம் நிலை நிறுத்தப்பட்டது.

5 ஆண்டுகளுக்கு வாகனமோட்டும் உரிமத்துக்கு விண்ணப்பிக்க முடியாது என்ற உத்தரவும் நீடிக்கிறது.

மேஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த 30-நாள் சிறையானது கண் மூடி திறப்பதற்குள் முடிந்து விடும்; அந்த 12,000 அபராதத்தையும் குற்றவாளி செலுத்தி விட்டார்.

ஆனால் பாதிக்கப்பட்ட தம்பதியோ நிரந்தர செயலிழப்புக்கு ஆளாகியுள்ளதோடு, கடைசி வரை மற்றவர்களை நம்பி வாழ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே குற்றவாளிக்கும் பொது மக்களுக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும் வகையில் கடுமையான தண்டனையை விதிக்குமாறு, அரசு தரப்பு முன்னதாக உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.

மே 10-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு டூத்தா டோல் சாவடிக்கு முன்பாக, மாநகரை நோக்கிச் செல்லும் PLUS நெடுஞ்சாலையில் , தர்மராஜு ஓட்டிச் சென்ற Nissan Navara வாகனம், மோட்டார் சைக்கிளில் சென்ற அத்தம்பதியை மோதித் தள்ளியது.

அதில் மோட்டார் சைக்கிளோட்டியான கணவருக்கு கழுத்து எலும்பு முறிந்து, கணுக்காலில் காயமேற்பட்டது.

பின்னால் அமர்ந்து சென்ற மனைவிக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டதுடன், விலா எலும்பும் கணுக்காலும் முறிந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!