
ஷா அலாம், நவம்பர்- 10,
கிள்ளான் , கம்போங் ஜாவாவில் உள்ள 19 நிலங்களில் வசிப்பவர்களுக்கு, மேற்கு கடற்கரை விரைவுச்சாலையின் (WCE) நிறுத்தப்பட்ட ஒரு பகுதியை நிர்மாணிப்பதற்காக, அந்த இடத்தை காலி செய்ய கூடுதலாக இரண்டு வாரங்களுக்கு சிலாங்கூர் அரசாங்கம் அவகாசம் வழங்கியுள்ளது. குடியிருப்பாளர்கள் தங்கள் புதிய வீடுகளுக்கு குடிபெயரும் பணியில் ஈடுபட்டுள்ளதால் , குறிப்பாக வயதானவர்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் G. குணராஜ் தெரிவித்தார். இம்மாத இறுதி வரை கால நீட்டிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு சிலாங்கூர் மந்திரிபெசார் அமிருடின் ஷாரியை ( Amirudin Shari ) வலியுறுத்தியதாக குணராஜ் வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.
உண்மையிலேயே தேவைப்படுபவர்களுக்கு வசதியான வீட்டுவசதியை வழங்கியதற்கும், தனது கோரிக்கையை பரிசீலித்ததற்கும் மந்திரி பெசாருக்கு குணராஜ் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இரண்டு வார நீட்டிப்பு வழங்கப்பட்டதை மாநில வீட்டுவசதி நிர்வாகத்திற்கான ஆட்சிக் குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா (Borhan Aman Shah ) உறுதிப்படுத்தினார். 19 நில உரிமையாளர்களும் 7 நாட்களுக்குள் தங்களது நிலத்தை காலி செய்ய வேண்டும் என கடந்த வாரம் சிலாங்கூர் அரசு உத்தரவிட்டது.
நிலம் கையகப்படுத்தும் 1960 ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் நிலம் செயல்முறை 2023 ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக முடிக்கப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு 9.85 மில்லியன் இழப்பீட்டில் 75 விழுக்காடு ஏற்கனவே செலுத்தப்பட்ட போதிலும் அவர்கள் தங்களது நிலத்தை கால செய்ய மறுத்துவிட்டனர்.



