
புத்ராஜெயா, ஜூன்-19 – தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை பரப்பியதாகக் கூறி டெலிகிராம் மற்றும் அதன் இரண்டு கணக்குகளுக்கு எதிராக, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC வழக்குத் தொடர்ந்துள்ளது.
Edisi Siasat, Edisi Khas ஆகிய அந்த இரண்டு டெலிகிராம் கணக்குகளும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு -பல்லூடகச் சட்டத்தை மீறும் உள்ளக்கங்களை வெளியிட்டுள்ளன.
பொது நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை சிதைத்து சமூக ஒழுங்கை அச்சுறுத்தும் அபாயத்தை அந்த உள்ளடக்கங்கள் கொண்டிருப்பதாக, MACC தனது வழக்கு மனுவில் கூறியது.
ஒரு சமூக ஊடக தள சேவை வழங்குநருக்கு எதிராக எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும்.
MCMC பல பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஒத்துழைப்பு வழங்கியும், மீண்டும் மீண்டும் புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க டெலிகிராம் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Edisi Siasat., Edisi Khas ஆகிய இரண்டும், பொது நிறுவனங்கள் மற்றும் அமுலாக்க நிறுவனங்களை குறிவைத்து குற்றச்சாட்டுகளை வெளியிடுவதற்கு பெயர் பெற்ற அநாமதேய டெலிகிராம் கணக்குகளாகும்.
அதிகாரப்பூர்வமற்றதாக இருந்தாலும், அவ்விரு கணக்குகளின் பதிவுகள் பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கின்றன அல்லது பொது விவாதங்களைத் தூண்டும் வகையில் அமைகின்றன.
எனவே அந்த உள்ளடக்கங்கள் தொடர்ந்து பரவுவதைத் தடுக்க, உயர் நீதிமன்றத்திடமிருந்து இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றதாக MCMC அறிக்கையொன்றில் கூறியது.
சமூக ஊடகத் தளங்களில் உள்ள உள்ளடக்கங்கள் மலேசிய சட்டங்களை மீறவில்லை என்பதை உறுதிச் செய்ய வேண்டிய கடமையும் கடப்பாடும் சமூக ஊடக தள சேவை வழங்குநர்களுக்கு உண்டு; எனவே சேவை வழங்குநர்களும் இதே போல் ‘பிடிவாதம் காட்டினால்’ அவற்றின் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என அந்த ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்தது.
மலேசியாவின் டிஜிட்டல் உலகம் பாதுகாப்பாகவும், நெறிமுறையாகவும், சட்டத்திற்கு இணங்கவும் இருப்பதை உறுதிச் செய்வதில் உறுதியாக உள்ளதாக MCMC கூறியது.